பேருந்துக்கு நிற்கையில்
நிழற்குடை முழுக்க சிரிப்பு
கூட்டத்தில் நடக்கையில் கூட
என்னைச் சுற்றி யாருமில்லை
திரை அரங்கில் பின் வரிசை விரல்கள்
என் கால்களை வருடின
மீசை இல்லாத வாலிபர்கள் கூட
இரட்டை அர்த்த வசனம் பேசினர்
என்ன பாவம் செய்தேன்..
ஆண்களுக்குள் நான் பெண்ணாய் வாழ்கிறேன்
பெண்களும் என்னிடம்
பேதம் பார்கின்றனர்..
விண்ணப்பங்களில் பாலினக் கட்டங்கள்
என்னைப் பார்த்து சிரிக்கின்றன..
கழிவறை வாசலில் நின்று குழம்பும் போது
மலம் கூட எனைப் பார்த்து எளனம் செய்கின்றது..
ஆண்டவன் படைப்பு இரண்டு தான் எனில்
நான் என்ன சாத்தான் பிள்ளையா?
தன்னை மறைத்து பெண்ணை மணந்து
துரோகிகள் வரிசையில் சேர மனமில்லை
இரவில் என்னிடம் காதல் பேசிய உதடுகள்
காலை விடிந்ததும் சாதலே மேல் என போதித்தது..
பொதுமிந்த கொடுமைகள்...
பிச்சையாய் கேட்கிறேன்
காசு பணம் வேண்டாம்
கொஞ்சம் மரியாதை கொடுங்கள்
மானம் போற்று என்ற
மறத்தமிழன் ரத்தம் நான்..
காணி நிலம் கேட்டான் பாரதி காளியிடம்
நானும் கேட்கிறேன் கொஞ்சம் காலியிடம்
எனக்காக மட்டும்
விண்ணப்பம் முதல் கழிவறை வரை
மூன்றாம் சாதியென முரசுரைத்து....
No comments:
Post a Comment